சனி, 14 ஜூன், 2014

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம்; ரவூப் ஹக்கீம்!!


ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும்இ உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரிய குடியரசு தூதுவர் வொன் சாம் சாங்க், அமைச்சர்
ஹக்கீமை நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மையானோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான நாடாளுமன்ற முறைமையே இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு இலங்கையில் உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல கட்சி ஜனநாயகம் நிலவி வரும் இந்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அபிப்பிராயங்களையும், நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கூட்டரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

முன்னர் காலனித்துவ நாடுகளாக இருந்து பின்னர் சுதந்திரமடைந்த போதிலும் அவ்வாறான பல நாடுகளில் சாதிப்பிரச்சினை காணப்படவே செய்கின்றது. இலங்கையில் இனப்பிரச்சினையை பொறுத்தவரை தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வன்முறையின் பால் நாட்டம் செலுத்திய அமைப்புகள் இருந்தன. இனப்பிரச்சினையானது நாட்டுக்குள் இனங்களுக்கிடையில் துருவப்படுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளது. உங்களது நாடான கொரியாவில் யுத்தம் நாட்டை இருவேறாக பிரித்துவிட்டது.

இலங்கையில் சில பொது அரசியல் ரீதியான தகராறுகள் தோன்றிய போதிலும் கூட, ஒரு போதும் இந்த நாடு இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடாகவே இந்நாடு தொடர்ந்தும் இருந்து வருகிறது. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது. இலங்கையில் நீதித்துறை முக்கியமான ஒரு துறையாகும்.

சட்டமும் ஒழுங்கும் சரிவர பேணப்படுவது ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமாகும். இலங்கை பாரம்பரிய பொருள்கள் பலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இலங்கையில் வர்த்தகத்திற்கும், முதலீடுகளுக்குமான வாய்ப்புகள் நிறையக் காணப்படுகின்றன. அதனை தென்கொரியா நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தூதுவருடன் தென்கொரியத் தூதரகத்தின் கவுன்சிலர் செல்வி ஜி இயுன்ப்யோ, நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக