ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து தமிழ் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் குறைக்கும் சதி தொடர்கிறது-வினோநோகராதலிங்கம் எம்.பி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாவட்ட தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமானளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதியொன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் ஒன்றுபட்டு, ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ்மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்;களுமே என்னவிலை கொடுத்தேனும் இவ்இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர். இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு, மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா 03 சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்துவதன்மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை தகர்க்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன. எமது மக்களில் சிலரை பலிக்கடாவாக்கி சிலநூறு அல்லது சில ஆயிரம் வாக்குகளை பிரித்தெடுப்பதன்மூலம் தமிழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை குறைக்கலாம் என்ர இலாபநட்டக் கணக்கு போடப்படுகிறது. இதற்காக எம் மத்தியிலுள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் மத்தியிலிருந்து ஆட்சேர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம். இதற்காக சாதி, மத, பிரதேச உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. எம்மத்தியில் இலகுவாக ஏமாறக்கூடிய சிலரை வளைத்துப்போட்டு தமது சுயநல அரசியல் இலக்கினை எட்டுவதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள். தமிழ் மக்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் பலத்தையும், ஒற்றுமை உணர்வையும் உடைத்தெறிய எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம் துணைநிற்கக் கூடாது. இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும். வரவிருக்கும் புதிய அரசுடன் பேரம் பேசக்கூடிய சம அரசியல்பலம் எம்மிடம் இருக்கவேண்டும். இதை உணர்ந்து விட்டுக்கொடுப்புகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட காலம் கனிந்துள்ளது. தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரே சிந்தனையுடன் இருக்கும்போது தமிழ் இயக்கங்கள், கட்சிகள் பிரிந்து நின்று ஒன்றுமே ஆகிவிடப் போவதில்லை. தலைமைத்துவத்தை வழங்க தகுதியற்றவர்களாகி விடுவோம். ஆயுத போராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டம் ஒன்றில் தோல்வியை சந்திக்கக் கூடாது. எம்மிடையே ஒற்றுமை குலைந்து போனால் இருப்பதையும் நாம் இழந்துவிடுவோம். கடந்துபோன கசப்பான படிப்பினைகளை உணர்ந்து எந்த சதி முயற்சிகளையும் முறியடிக்க எமது அரசியல்பலத்தை நிலைநிறுத்த கடுமையாக நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக