வெள்ளி, 16 மே, 2014

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க முற்பதிவு செய்யப்பட்ட மண்டபம்............!!!!!!!!!

வன்னி மண் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்களின் போதும், இறுதி போரின் போது முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களினதும், வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புகளினதும் பங்களிப்புடன் வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கூட்டுறவு கலாசார மண்டபத்தில் (முத்தையா மண்டபம்) மே 18 அன்று பி.ப 2.30 மணிக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன.

ஆத்மசாந்தி பிரார்த்தனைக்காக முற்கூட்டியே, கடந்த 12.05.2014 அன்று கடிதம் மூலம் மண்டப பாவனைக்கான அனுமதி நாடாளுமன்ற உறுப்பினரால் கோரப்பட்டு மண்டபம் முற்பதிவும் செய்யப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவை அனுஸ்டிக்க முத்தையா மண்டபத்தை வழங்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளதோடு, மீறி வழங்கினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளதையடுத்து மண்டபத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழினப்படுகொலை நாளான மே 18 ஐ நினைவு கூறுவதற்கு, வவுனியாவின் பல பகுதிகளிலும் உள்ள இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பொது மண்டபங்கள், பொது விளையாட்டு மைதானங்கள், சனசமுக நிலையங்கள், கூட்டுறவு மற்றும் சங்க கட்டடங்கள், ஹோட்டல் அரங்குகள், கழக விளையாட்டு திடல்களை வழங்க வேண்டாம் என்றும், அவற்றுக்கு பொறுப்பானவர்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளதோடு, குறித்த இடங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வவுனியாவில் ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருவதால், மக்கள் மத்தியில் பலத்த அச்சநிலை காணப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது,

கூட்டுச்சதி மூலமும், கூட்டுப்படை பலம் மூலமும் பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் எனும் மிகக்குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனித குலப்படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நடத்தப்பட்ட வன்முறைப்போரால் எமது மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டுள்ளனர்.

1983ம் வருட கறுப்பு ஜீலை இனக்கலவரத்துக்கு பின்னர் 2009 மே 18 படுகொலைகள் தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். எமது தேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத துயர நிகழ்வாகும். தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக இந்நாளை பிரகடனப்படுத்த வேண்டியது ஈழத்தமிழர் நலனில் கரிசனை கொண்டுள்ள, ஈழத்தமிழர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகின்ற அனைத்து தரப்பினரதும் மறுதளிக்க முடியாத வரலாற்று கடமையாகும்.

போரின் போது இறந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து பெரும் கூட்டாகவோ, சிறு குழுவாகவோ அஞ்சலி செலுத்துவதற்கும், துயர் பகிர்வதற்கும் உலகிலுள்ள ஒவ்வொரு சமுகத்துக்கும் உரிமை உள்ள நிலையில்,

இந்த வழிபாட்டு உரிமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனங்களும் சாசனங்களும், அதிகாரமும் அங்கீகாரமும் வழங்குகின்ற நிலையில்,

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை வகிக்கும் சிறீலங்கா அரசு மட்டும், ஐநா மனித உரிமை பிரகடனங்களுக்கும், சாசனங்களுக்கும் முரணான வகையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு தடை விதிப்பதானது, அதன் அடிப்படை மனித உரிமை மீறல்களில் இதுவும் ஒன்றாகும்.

போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவுகளில் நினைந்துருகி கடந்த நான்கு வருடங்களாக கடுமையான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், இடையூறுகளுக்கு மத்தியிலும் மே 18 அன்று ஆத்மசாந்தி பிரார்த்தனையில் உணர்வுபூர்வமாக ஈடுபட்டு வருகின்றோம். இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிப்பதற்காக எம்மால் முற்பதிவு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வன்னி போரின் போது பாதிக்கப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என்று மட்டும் இல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சர்வமதத்தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதன் தொண்டு நலப்பணியாளர்கள். சிவில் சமுக அமைப்புகள் அதன் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமுக  ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்களின் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புகள், சங்கங்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைத்து பொதுமக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு,

போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவுகளில் கூட்டாக நினைந்துருகி ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு அமைவாகவே குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும்,

எனினும், போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு திட்டமிட்டபடி பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மே 18 அன்று ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக