
ஜெனரல் சரத்பொன்சேகா தங்கியுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலம் செவ்வாய்க்கிழமை மாலையும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்பு தேடுதலானது பொலிஸாருக்கு அவர்களின் உயரதிகாரிகள் இட்ட கட்டளையின் பேரிலே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்சேகாவின் வீடு கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதியும் பின்னர் டிசம்பர் 4ம் திகதியும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது. அடிக்கடி இடம்பெறும் இந்த தேடுதல்கள என்ன காரணத்தினால் நடந்தது என இன்னும் அறியக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சரத்பொன்சேகா வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிடக் கோரி குருநாகலைச் சேர்ந்த சட்டத்தரணி யு.பி.ஜெயமானே என்பவர் நேற்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அரச பதவியிலிருந்து ஓய்வுபெற்று ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் ஒருவர் தமது தேர்தல் பணிக்காக அரச விடுதியில் தங்கியிருப்பது முறையற்றது என்றும் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டு வரும் ஒருவர் ஓய்வின் பின்னரும் அரச விடுதியை பயன்படுத்துவது தவறு என்றும் இதன் காரணமாக அவரை அந்த இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய ஆகியோரும் இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக