வெள்ளி, 22 மே, 2015

விரைவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவேன்: மஹிந்த

இந்த ஆட்சியை மாற்றி, நாட்டில் மூவின மக்களும் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி மாற்றமொன்றை விரைவில் உருவாக்குவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார். அம்பாறை, உகன வீதியிலுள்ள போதி விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத காலத்தின் போது மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலதரப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். அன்றிருந்த பயங்கரவாத
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் நானே. சுபீட்சம் ஏற்படக் காரணமாக இருந்தவனும் நானே. எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நல்ல திட்டங்களையும் பணிகளையும் ஒரு போதும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்’ என்று கூறினார்.

அத்துடன், ‘எனது தலைமையில் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நல்ல பல திட்டங்களை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை அரசியலிலிருந்தும் மக்கள் மனத்திலிருந்தும் ஓரங்காட்டுவதற்கான முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது’ எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், ‘தற்போது இந்த நாட்டில் நடைபெறுவது என்ன? எனது ஆதரவாளர்கள் மற்றும் சமுர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் பழிவாங்கப்படுவதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பருப்பு உட்பட பல பொருட்களை விலையேற்றி மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தியுள்ளனர்’ எனத் தெரிவித்தார். ‘மக்களின் விரும்பமின்றி மாகாணசபை ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிரதேச சபைகளைக் கலைத்து, மக்களுக்கு பணி செய்தவர்களை பழிவாங்குகின்றனர்.

எனவே, இஸ்திரமில்லாத இந்த ஆட்சி நாட்டுக்கு வேண்டுமா? அல்லது நிம்மதியான சபீட்சமான ஆட்சி வேண்டுமா? என உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன்’ என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான விமல வீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் பியசேன உட்பட மதகுருமார்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொரும்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக