செவ்வாய், 29 ஏப்ரல், 2014

“கே.பி.”யின் முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தின், இரண்டாம் ஆண்டு நிறைவுவிழா..!!

முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி பாரதி சிறுவர் இல்லத்தில் நிறைவுவிழா நிகழ்வுகள் 27-04-2014 மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகி சிறுமிகளின் மிக அழகான கலைநிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் இல்லத்தின் தந்தையும், நெர்டோ நிறுவன செயலருமான திரு.பத்மநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மற்றும் வைத்தியகலாநிதி திரு.ஜெயகுலராஜா, முள்ளியவளை தண்ணீர் ஊற்று ஆலய பிரதம குருக்கள், அருட்தந்தை திரு.வின்சன் அடிகளார், இலண்டனைச் சேர்ந்த திரு.திருமதி.சண்முகசிவம், கிராமசேவையாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி, முள்ளியவளை சைவப்பாடசாலை அதிபர் திருமதி.கௌசல்யா, வித்தியானந்தாக் கல்லுாரி ஆசிரியர் திரு.கோகிலதாஸ், கோசலா புடவையக உரிமையாளர் திரு.தேவராஜா, முள்ளியவளை பிரதேச தலைமை காவல்துறை அதிகாரி H.M.S.திலகரட்ண, சிறுவர் இல்லத்தின் ஆங்கில ஆசிரியர் திரு.வன்னியசிங்கம், பாரதி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுமிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 கும்பம், விளங்கேற்றி வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.

மங்கல விளங்கினை நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர். அதனைத்தொடர்ந்து அகவணக்கத்தின் பின்னர் ஆசியுரையை தண்ணீரூற்று ஆலய குருக்களும், அருட்தந்தை திரு.வின்சன் அவர்களும் வழங்கினர்.

இவர்கள் தமது ஆசியுரையில் இல்லத்தின் பணிகள் மேன்மேலும் சிறக்கவும், சிறார்கள் கல்வியில் சிறந்துவிளங்க வாழ்த்தியதுடன் இவ்வாறான ஒரு இல்லம் உருவாகி சிறுவர்கள் இனிதே பராமரிக்கப்பட்டு சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமான திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டினர். தொடர்ந்து பாரதி இல்லத்தின் சிறுமிகளால் பாரதி இல்லத்தின் கீதம் இசைக்கப்பட்டு, அழகான வரவேற்பு நடனத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வரவேற்புரையை பாரதி சிறுவர் இல்லத்தின் முகாமைத்துவ சபை செயலாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வழங்கினார். தொடர்ந்து வைத்தியகலாநிதி திரு.ஜெயகுலராஜா அவர்கள் தலைமையுரையை வழங்கினார். அவர் தனதுரையில் மிக நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த இல்லமானது இரண்டாம் வருட முடிவில் மிக உன்னதமாக வளர்ந்துள்ளது கண்டு தான் பெருமைப்படுவதாக உரையாற்றினார்.

இந்த இல்லமானது பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, உறவினர்களுக்கு நிகராக பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து நிற்கின்றது எனப் பாராட்டினார். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக பல சிரமங்களின் மத்தியல் நிதிகளை பெற்று இவ் இல்லத்தை ஒழுங்கமைத்து நடாத்திவரும் திரு.பத்மநாதன் அவர்களை வாழ்த்தினார்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக இல்லத்தின் நிர்வாகிகளை வாழ்த்தினார். அடுத்து பாரதி இல்ல சிறுமியின் ஆங்கில கவிதையைத் தொடர்ந்து. சிறப்புரையை திரு.பத்மநாதன் அவர்கள் வழங்கினார். இது சிறுவர்களுக்கான அறிவுரைகளாக அமைந்தது. முதலில் வந்திருந்தவர்களை வரவேற்ற திரு.பத்மநாதன் அவர்கள் ஆரம்பத்தில் முத்தையன்கட்டு அன்பு இல்லத்தில் இருந்த பாரதி இல்ல சிறுமிகள் முள்ளியவளை பாரதி இல்லத்திற்கு மாற்றமடைய அதற்கான அனுமதியை தந்த பாதுகாப்பு செயலாளர் திரு.கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தளபதி மார்க் அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணிகளால் எமது சமூகத்தில் காணப்படும் முக்கிய பிரச்சனையாக சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதொன்றாக உள்ளது. எம்மால் முடிந்தவரை இப்படியான குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கென்றொரு எதிர்காலத்தை உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

அன்பு குழந்தைகளே..! உங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டும். பெண்கள் என்றாலே ஒரு அடிமைத்தனமானவர்கள் என நினைக்கும் ஒரு வட்டத்துக்குள் கட்டுப்பட்டு உங்களை அழிக்காமல் எதிர்காலத்தில் நம்பிக்கைவைத்து பல சாதனைகளை செய்யுங்கள். இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என நீங்கள் நன்றாக தெரிந்துள்ளீர்கள். நெருப்பை சுட்டால் சுடும் என்று தெரிவதுபோல் கெட்டவிடயங்கள் அழிவைத்தான் தரும்.

உங்களுக்கு உறுதுணையாக இல்லாதவற்றை விட்டு நல்வழியில் செயற்படுங்கள். நல்லதை நினைத்து நல்லதையே செய்யுங்கள் நீங்கள் ஆண்டவனுக்குப் பக்கத்தில் இருப்பீர்கள் உங்களை எதுவும், யாரும் எதுவும் செய்யமுடியாது.  நாம் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்யக் காத்திருக்கிறோம். உங்களிடம் நாம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் “கல்வி”. கல்வியால் உயர்வடைந்து எமக்கும், உங்களுக்கும் பெருமை சேருங்கள் என கேட்டுக்கொணடார்.

தொடர்ந்து இல்லத்தின் வளர்ச்சிக்கு உதவிசெய்யும் அனைவரையும் பாராட்டினார்.
 அடுத்து சிறுமிகளின் அழகான கிராமிய நடனம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த திரு.சரத் சந்திரதாஸ் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவர் தனது உரையில் சிறுவர்களின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு உரையாற்றினார். மாணவர்கள் நம்பிக்கையாக செயற்படவேண்டும் என சுட்டிக்காட்டி உரையாற்றியதுடன் அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மாணவர்களின் வளர்ச்சியை அருகிலிருந்து கவனித்தவர் என்றவகையில் சிறுமிகளின் வளர்ச்சியைக் கண்டு மிகவும் பெருமைப்பட உரையாற்றினார். கனடாவில் சிறுவர் இல்லத்திற்காக உதவிசெய்யும் அனைவரையும் பாராட்டினார். தொடர்ந்து கவியரங்கம், சிறுமி மதுசாவின் பாடல் என்பன நன்றாக அமைந்தது.
 அடுத்து இலண்டனிலிருந்து வந்திருந்த திரு.சண்முகசிவம் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு சைக்கிள்களை கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள் இருவர் பெற்றுக்கொண்டனர். சைக்கிள்களை திரு.சண்முகசிவம், திரு.சரத் சந்திரதாஸ் ஆகியோர் மாணவிகளுக்கு வழங்கினர். அதைனைத் தொடர்ந்து சிறுமி சுசானியின் அபிநயநடனம் அனைவரையும் கவர்ந்தது.
மிக நேர்த்தியாக நடனத்தை வழங்கிய சிறுமியின் திறமையை பலரும் பாராட்டினர். இச்சிறுமியை பாரட்டிய இல்லத்தின் தந்தையான திரு.பத்மநாதன் அவர்கள் சிறுமியை பாராட்டி பரிசிலையும் வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்வுகள் செய்த அனைவரையும் திரு.பத்மநாதன் அவர்களும், திரு.ஜெயகுலராஜா அவர்களும் பாராட்டினர். தொடர்ந்து கர்ணன் நாடகம் இடம்பெற்றது.

கர்ணனின் ஈகையை பெருமைப்படுத்துவதாக அமைந்த இந் நாடகத்தில் சிறுமிகள் தமது திறமைமை வெளிப்படுத்தி உரிய ஆடை அலங்காரத்துடன் சிறப்பாக நடித்தனர். குறிப்பாக குந்தி, கர்ணன், கண்ணன் பாத்திரங்களை ஏற்ற சிறுமிகள் சிறப்பாக நடித்தனர்.  அனைவரும் இந்த நாடகத்தை பாராட்டினர். தொடர்ந்து இல்லத்தின் நிர்வாகி திருமதி.மகேஸ்வரி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் மாலை 6.15 அளவில் இனிதே நிறைவுபெற்றது.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக