வெள்ளி, 22 மே, 2015

தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் ராஜினாமா; ஜெயலலிதாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கான பதவி விலகல் கடிதத்தை ஆளுனர் ரோசைய்யாவிடம் இன்று காலையில் அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஆளுனர் ரோசைய்யா, புதிய அமைச்சரவை பதவியேற்கும்வரை பதவியில் தொடரும்படி பன்னீர்செல்வத்தைக் கேட்டுகொண்டார்.

அதற்குப் பிறகு, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கும்படி, அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு ஆளுனர் அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சர்களின் பட்டியலை அளிக்கும்படியும் அவர் கோரியுள்ளார்.


இன்று பிற்பகலில் ஆளுனரைச் சந்திக்கும் ஜெயலலிதா, தனது அமைச்சரவைப் பட்டியலை ஆளுனரிடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலையில் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

அ.இ.அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை 7 மணிக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் துவங்கியது.

இந்தக் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தே.மு.தி.கவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காலை ஏழு மணிக்குத் துவங்கிய இந்தக் கூட்டம் பத்து நிமிடத்தில் முடிவடைந்தது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வுசெய்வதாக ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதனை வழிமொழிந்தார்.

இதையடுத்து, சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தை ஒட்டி, அ.தி.மு.க. தலைமையகம் முன்பாக ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடியிருந்தனர்.

இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு, ஜெயலலிதாவைச் சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆளுனர் ரோசைய்யாவைச் சந்தித்தார். ரோசைய்யாவைச் சந்தித்த பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டிருப்பதைத் தெரிவித்தார்.

தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும் அளித்தார்.

இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்கும்படி ஜெயலலிதாவுக்கு ஆளுனர் ரோசைய்யா அழைப்பு விடுத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு, முதல்வர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் முதல்வராக செப்டம்பர் 29ஆம் தேதியன்று ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

இன்று பிற்பகலில் ஜெயலலிதா ஆளுனரைச் சந்தித்து, புதிய அமைச்சரவைப் பட்டியலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குப் பிறகு, 2.30 மணியளவில் அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

நாளை அவர் முதலமைச்சராகப் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்கென சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கட்டிடம் தயார் படுத்தப்பட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக