ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சில் பாரிய ஊழல்கள்..!!

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தேசிய மொழிகள் மற்றும் சமூகத்துறை அமைச்சில், பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குகள் குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த குழுவுக்கு தலைமை தாங்கும் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன்படி வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சில் அதிகாரிகள் மட்டத்தில் முறைகேடுகளும் ஊழல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சினால், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களும் தோல்வியடைந்துள்ளன.  2005ஆம் ஆண்டில், வாசுதேவவின் அமைச்சுக்கு யுஎன்டிபியினால் 2,221,988 ரூபாய்கள் வழங்கப்பட்டன.



வடக்கில் மும்மொழி கொள்கை திட்டத்துக்காக இது வழங்கப்பட்டது

எனினும் 2011 டிசம்பர் 20ஆம் திகதிவரை 170, 360 ரூபா பயன்படுத்தப்படாமலேயே பொதுக்கணக்குக்கு திரும்பியது.

அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக 6 வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக அதிகமான செலவு ஏற்பட்டது.

குறித்த அமைச்சு நிதிச்சட்டத்தின் 75.1, 75.2 பந்திகளின் சரத்துக்களை உரிய வகையில் பின்பற்றவில்லை.

இதேவேளை அமைச்சினால் ஆலோசகர்களுக்கு 1,267,750 ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் இதற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

2006, 2007 ஆம் ஆண்டுகளில் தமிழ் மொழி விரிவுரையாளர்களுக்காக அமைச்சினால் 3, 643, 420 ரூபாய்களும் 5, 637, 676 ரூபாய்களும் செலுத்தப்பட்டுள்ளன.

எனினும் இந்த விரிவுரைகளுக்காக உரிய பாடத்திட்டங்கள் எவையும் பின்பற்றப்படவில்லை என்று நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக