புதன், 11 ஜூன், 2014

யுத்த காலங்களில் காணி, சொத்துக்களை இழந்தோருக்கு மீளப்பெற புதிய சட்டம்...!!!

யுத்த காலத்தில் தமது காணி களையும் சொத்துக்களையும் இழந்த வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு தமது காணிகளை மீளப் பெறுவதற்கு ஏற்றவாறு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விசேட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் இதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய சட்டமூலத்தினூடாக 1983 மே மாதம் முதலாம் திகதி முதல் 2009 மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணிகளை இழந்த மற்றும் தமது காணிகளுக்கான உரிமையை நிரூபிக்க சட்ட உதவியை நாட முடியாத வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு நன்மை கிடைக்கவுள்ளது.



வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து யுத்தம் காரணமாக தமது சொத்துக்களை கைவிட்டு வேறு இடங்களில் குடியேறிய நபர்கள் தமது உரிமைகளை மீளப் பெறுவதற்கு இந்த சட்டமூலத்தினூடாக 12 மாதகால அவகாசம் வழங்கப்பட உள்ளது. குறித்த காலப்பகுதியினுள் இவர்களுடைய சொத்துக்களை வேறு நபர்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதால், தமது சொத்துக்களை மீளப் பெறுவதற்காக வழக்கு தொடரும் உரிமை புதிய சட்டத்தினூடாக இவர்களுக்கு கிடைக்கிறது.

உரிமையாளர்களின் காணிகளில் வேறு நபர்கள் 10 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால், அதனால் முதலாவது உரிமையாளருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்டத்தினூடாக நீக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

யுத்தத்தினால் காணி இழந்தவர்கள் இறந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு புதிய சட்டத்தினூடாக காணிக்கு உரிமை கோரவும் அவகாசம் வழங்கப்படுகிறது.

இது தொடர்பான சட்டமூலம் கடந்த மே மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக