வெள்ளி, 7 நவம்பர், 2014

கொஸ்லாந்த மண்சரிவு அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகளில் முரண்பாடு..!!

கொஸ்லந்தை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகளில் முரண்பாடு காணப்படுகின்றது.
பொலிஸார், இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் மாவட்டச் செயலகம் என்பன இவ்வாறு முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை என்பன பற்றிய தகவல்களில் வித்தியாசம் காணப்படுகின்றது.

பதுளை மாவட்டச் செயலாளர் ரோஹண திசாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், 64 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 340 என தெரிவித்துள்ளார்.

12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 296, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 22 என குறிப்பிட்டுள்ளார்.



எனினும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளி விபரங்கள் மாறுபட்ட தகவல்களையே வெளிப்படுத்துகின்றது.

பிரதேசத்தில் 57 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 330 எனவும் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். வேறு பிரதேசங்களில் வசித்து வரும் நபர்களின் எண்ணிக்கை 44 ஆகும்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 எனத் தெரிவித்துள்ளது.  இந்த புள்ளி விபரத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 28 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீரியபெத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை காணாமல் போனவாகள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய சரியான தகல்களை வழங்க மூன்று அரசாங்க நிறுவனங்களினாலும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக