திங்கள், 9 ஜூன், 2014

இரத்த தானம் வழங்கும் முதன்மை நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்....!!!!

இரத்த தானம் வழங்குவதில் முதன்மையான நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் வருடாந்தம் சுயாதீனமாக 3,50,000 அலகு இரத்தம் தானமாக பெறப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதி உலக இரத்த நன்கொடையாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. “தாய்மாரைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இரத்தம்” எனும் தொனிப் பொருளில் இம்முறை இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

உலக இரத்த நன்கொடையாளர் தின சர்வதேச மாநாடு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறும் இந்த சர்வதேச நிகழ்வில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுகாதாரத் துறை பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.



மேற்படி மாநாட்டை முன்னிட்ட செய்தியாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றதுடன் மாநாட்டில் குடும்ப சுகாதார செயலணியின் பிரதிப் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா விளக்கமளித்தார். உலகில் பிரதி வருடமும் பிரசவத்தின்போது ஏற்படும் நோய்களினால் 2,80,000 தாய்மார் மரணமடைகின்றனர். இவற்றில் 99 வீதமான மரணங்கள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.

இலங்கையில் இத்தகைய மரணங்கள் வருடாந்தம் 120ற்கும் 150ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகவுள்ளன. இது 29% வீதமாகவுள்ளதுடன் பிரசவசத்தின் போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கே இதற்கு முக்கிய காரணமாகுமெனவும் அவர் தெரிவித்தார். இதனால் இந்த மரணங்களைத் தடுப்பதற்கு பாதுகாப்பான இரத்தம் வழங்குதல் பெரும் உறுதுணையாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். பிரதி வருடமும் உலகில் மில்லியன் கணக்கான மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு இரத்த பரிவர்த்தனை சேவை உதவியளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக