சனி, 14 ஜூன், 2014

அச்சுவேலி முக்கொலை வழக்கு எனது கணவரே மூவரையும் கொன்றார் சாட்சியம் கூறும் மனைவி..!!

தனது கணவரே மூன்று பேரையும்  கொலை செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாகவும், அச்சுவேலி,  முக்கொலைகளைச் செய்தவரான தனஞ்சயன்  மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

யாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.



அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நிர்க்குணானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிர்க்குணானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்சயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்சயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் மேற்படி மூன்று படுகொலையினைச் செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தர்மிகா நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக