செவ்வாய், 20 மே, 2014

மாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு எதிரான வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றுக்கு நேரில் சமுகம் தரும்படியான அழைப்பாணை நேற்று மாலை நீதிமன்றம் மூலம் நேரடியாக அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தமையை அடுத்து அவர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் முற்பட்டார். அவருக்குத் எதிரான வழக்கு ஒன்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையை ஒட்டியே அவர் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டார் என்று அங்குத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த வழக்கு
அவருக்கு எதிராகப் பொலிஸாரினால் சோடிக்கப்பட்ட ஒன்று என நீதிமன்றத்தில் கூறப்பட்டமையை அடுத்து வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. ரவிகரனும் விடுவிக்கப்பட்டார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணைடைந்த பின்னர் காணாமல் போயினர் என்று கூறப்படும் சிலர் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சில ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை விரைந்து விசாரணைக்கு எடுக்கப்படாமல் காலம் இழுபடுவதை ஒட்டி மனுதாரர்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்கவேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் - அதுவும் மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் எடுக்கப்படும் நாளில் - நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருப்பதாக சில வட்டாரங்களில் பேச்சடிபட்டது.

அந்தப் பேச்சை ஒட்டியே ரவிகரனுக்கு எதிராகப் பொலிஸார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தனர் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பில் மேலும் கூறப்படுபவை வருமாறு:- இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது எனவும், அது நீதிமன்ற அமைதிக்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் பங்கம் விளைவிக்க கூடிய செயலாகையால் அதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மேலும் இவ்வாறான தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ரவிகரன் திட்டமிட்டுள்ளார் எனவும் பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ரவிகரனிடம் வினவப்பட்ட போது காணாமல் போனோர் எம்முடைய உறவுகள். அவர்களுக்காக ஆர்ப்பாட்டங்களும் மக்கள் எழுச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்ட அவர் இன்று அது தொடர்பில் எதுவித திட்டமும் தான் யாரிடமும் முன்வைக்கவில்லை எனவும், இன்று ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடைபெறவிருக்கிறது என்று பொலிஸாரால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது எதுவித ஆதாரப் பின்னணிகளுமின்றி சோடிக்கப்பட்டதொன்றே எனவும் அவர் சாடினார். ரவிகரன் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் பரஞ்சோதி இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாததால் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார். அதனால் பொலிஸாரால் ரவிகரன் மீது போடப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக