வியாழன், 22 மே, 2014

கொழும்பு இந்துக்கல்லூரி ஆசிரியர் விடுதியிலிருந்து சடலமாக மீட்டெடுப்பு.....!!!!

உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் தூக் கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பு - 04, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான குளியாப்பிட்டியை வசிப்பி டமாகவும்.

மன்னாரை பிறப்பிடமாகவும் கொண்ட 37 வயதுடைய பிரான்ஸிஸ் கெமிலஸ் என்ற ஆசிரியரே இவ்வாறு நேற்று அதிகாலை சடலமாக மீட்டெடு க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்துக் கல்லூரி மைதானத்துடன் உள்ள வகுப்பறை கட்டடத்துக்கு அருகிலுள்ள உடற்பயிற்சி ஆசிரியர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என்பது மர்மமான நிலையில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த திடீர் சம்பவத்தை அடுத்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டதுடன் அங்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. கடந்த திங்கட் கிழமை இரவு இறுதியாக தனது கணவருடன் கதைத்த உயிரிழந்த ஆசிரியரின் மனைவி செவ்வாய்க்கிழமை தொடக்கம் தொலைப்பேசியில் தொடர்புகொள்ளாதிருந்துள்ளார்.

இதனால் சந்தேகத்தின் பேரில் தனது நண்பர் ஒருவரை குறித்த பாடசாலையின் விடுதிக்கு அனுப்பி பார்த்துள்ளார். இதன்போது குறித்த ஆசிரியர் தான் தங்கியிருந்த விடுதி அறையின் கதவு மூடப்பட்டிருந்துள்ளது. பின்னர் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புடன் தொடர்பு கொண்டு பொலிஸாரின் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குறித்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அவதானித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் சடலத்தை இறக்கி எடுத்துள்ளனர். சடலத்தின் அருகில் ஆசிரியரின் கையடக்க தொலைபேசியும் விழுந்து கிடந்துள்ளது.

மனைவியின் கருத்து

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட தனது கணவரின் மரணம் தொடர்பில் தனக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த ஆசிரியரின் மனைவியான நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாக கடமையாற்றிவரும் மஹேஷா  தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :-

‘எனது கணவர் ஒரு கிறிஸ்தவர். மன்னார் பனங்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவர். நான் பெளத்த மதத்தைச் சேர்ந்தவள். எனது சொந்த ஊர் குளியாப்பிட்டியவாகும். உடற்பயிற்சி கல்லூரியில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு மZஷா என்ற 6 வயதில் பெண் பிள்ளையொன்றும் ஆதித்ய என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளன.

எனக்கும் எனது கணவருக்கும் இடையில் கூறும் அளவுக்கு எவ்வித பாரிய குடும்ப பிரச்சினையும் கிடையாது. கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக நாம் இருவரும் மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றோம். நான் அவருடன் கடைசியாக கடந்த திங்கட்கிழமை இரவு பேசினேன். இரண்டு தினங்கள் கொழும்பில் தங்கியிருக்கும் அவர் மூன்று நாட்கள் வீட்டிலிருந்து பாடசாலைக்கு வருவார். ஒவ்வொரு புதன்கிழமைகளில் குளியாப்பிட்டியவிலுள்ள எமது வீட்டுக்கு வரும் அவர் வெள்ளிக்கிழமை கொழும்பு திரும்புவார். அவ்வாறே இம்முறையும் வருகை தந்தார்.

2005 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் உடற் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று அன்று முதல் இன்று வரை அங்கேயே கடமையாற்றி வருகின்றார். தினமும் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வழக்கமாக கதைப்பார். நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு தடவையாவது நாம் இருவரும் கதைத்துக்கொள்வோம்.

ஆனால் கடந்த திங்கட்கிழமை இரவு மகள் கதைக்க வேண்டும் என்று கூறியதால் இரவு 9.30 மணிக்கு கதைத்தார் அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை காலை எனக்கு கதைக்க கிடைக்கவில்லை. பின்னர் நான் பாடசாலை முடிந்து வந்து அவருக்கு கதைக்க முயற்சித்தேன் அவரது கையடக்க தொலைபேசிகள் இரண்டும் செயற்படவில்லை. பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் இறுதிவரை அவருடைய தொடர்பு கிடைக்கவில்லை.

ஒருபோதும் இவ்வாறு நடைபெறாததால் எனக்குள் ஒரு அச்சம் ஏற்பட்டது. நான் உடனடியாக அவருடைய நண்பர் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி நிலைமையை கூறி கல்லூரியிலுள்ள அவரது விடுதி அறையைச் சென்று பார்க்குமாறு கோரினேன். எனது தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து அவர் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் அங்கு சென்று பார்த்துள்ளார்.

அந்த அறை மூடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது அவரது கால்கள் மாத்திரம் தொங்கிய நிலையில் தெரிவதாக கூறினார். அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து பொலிஸாரின் 119 என்ற அவசர அழைப்புடன் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலையும் 119 அறிவித்துள்ளது. பொலிஸாரின் உதவியுடன் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் பொலிஸாரின் உதவியுடன் சடலம் இறக்கி எடுக்கப்பட்டது என்றார்.

தற்பொழுது எல்லாமே முடிந்துவிட்டது. இந்த சம்பவத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது கணவருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடன் ஆசிரியர்களும் மாணவர்களும் நல்லம் என்றார். சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இந்தச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் கூறமுடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக