வியாழன், 22 மே, 2014

நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜெயலலிதா பங்கேற்கமாட்டார்....!!!

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்குபற்றுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடியின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக எதிர்வரும் 26ஆம் திகதி மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, ராஜபக்‌ஷவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில், இனப்படுகொலை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் ராஜபக்‌ஷ பங்கேற்கும் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் சார்பாக மூத்த அதிகாரி ஒருவர் இந்த நிழ்வில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நிகழ்வுகளை தமிழக அரசு ரத்து செய்திருந்தது.. ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் வழமைபோல் நடைபெறவிருந்த தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஜெயலலிதா ரத்து செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக