வியாழன், 3 ஜூன், 2010

கடற்படையின் பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பாதுகாப்பு செயலர்..!!

கடற்படையின் பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் மரபு ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடற்படை மற்றும் புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் மீண்டும் புலிகளின் செயற்பாடுகள் தலைதூக்குவதனை தடுக்க முடியும். புலி அச்சுறுத்தல் மட்டுமன்றி பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் வலுவாக அமைய வேண்டும். யுத்தத்திற்கு பின்னராக இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படுவதனை தடுப்பதற்கு கடற்பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக கடல்வழியாகவே ஆயுதக் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. கடந்தகாலங்களில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாத உலக சமூகம் தற்போது அவர்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். புலிகளுடன் ஒப்பீடு செய்யும்போது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பலம் மிகவும் குறைவானதென்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். மேலும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுப்பதற்கு இலங்கை உலக நாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும். யுத்தகாலத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை தற்போதைக்கு பூரணமாக களைய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக