வியாழன், 22 ஏப்ரல், 2010

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் - சரத் பொன்சேகா கன்னி உரை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான். சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார்.
இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார்.
தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.
அவர் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் அரசியலில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன்னர் விசாரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மறுத்துள்ள அவர், அந்த இராணுவ நீதிமன்றம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறுகிறார்.
அரசாங்கம் சரத் பொன்சேகா விடயத்தை மிகவும் சிக்கலுக்குரிய விடயமாக பார்க்கிறது.
செய்தியாளர்கள் அவரை அணுக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்ற முதல் நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அவரது பங்களிப்பை புறக்கணித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரரான சாமல் ராஜபக்ஷ அவர்கள் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக