வியாழன், 18 மார்ச், 2010

இன்ரபோலினால் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டுஅம்மானின் பெயர்?

இன்றும் கூட பொட்டுஅம்மான் மற்றும் அவருடன் தொடர்புடைய வேறு இருவரின் பெயர்கள் இன்ரபோலின் தேடப்படுவோர் பட்டியலில் காணப்படுகிறது. பொட்டுஅம்மான் இறந்திருந்தால் அவருடைய பெயர் இன்ரபோலின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் எதுவுமில்லை. கடந்த டிசம்பரில் இன்ரபோலின் ரெட் நோட்டீஸில் அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதென்று டெய்லிமிரர் பத்திரிகையில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கை அரசாங்கம் அவர் இறந்துவிட்டதாக முன்னர் தீர்மானத்திற்கு வந்திருந்தது. அத்தகைய நிலையில், இன்ரபோலின் இணையத்தளத்தில் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையால் அரசாங்கம் தனது கருத்தை மாற்றிக்கொள்ளுமா? பொட்டுஅம்மானின் மரணச் சான்றிதழ் விநியோகிக்கப்படாததால் அவருடைய பெயர் இன்ரபோலின் பட்டியலில் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரபாகரன் கொல்லப்பட்ட தருணத்தில் பொட்டுஅம்மானும் இறந்ததாக முன்னர் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆயினும், பொட்டுஅம்மானின் உடல் மீட்கப்பட்டிருக்கவில்லை. பிரபாகரன் மற்றும் இறந்த ஏனைய தமிழ்ப்புலிகளின் தலைவர்களின் உடல்களை அரசாங்கம் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தபோதிலும் பொட்டுஅம்மானின் உடல் மீட்கப்பட்டிருக்கவில்லை. பிரபாகரனின் உடல் இறந்த ஏனைய புலிகளின் தலைவர்களின் உடல்களின் புகைப்படங்கள் கிடைக்கக்கூடியதாக இருந்தபோதிலும் பொட்டுஅம்மானின் இறந்த உடலின் புகைப்படம் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
பொட்டுஅம்மான் தற்கொலை செய்துகொண்டதால் அவருடைய உடலை மீட்க முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆதலால் அவருடைய சாம்பலைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் அவருடைய மனைவியும் தற்கொலை செய்து கொண்டார் என்ற கருத்து அரசாங்கத்திடம் காணப்படுகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பிரபாகரனினதும் பொட்டுஅம்மானினதும் மரணச்சான்றிதழை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டபோது, இருவரும் இறந்ததை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்திருந்தது.
பிரபாகரனுக்கும் பொட்டுஅம்மானுக்கும் எதிரான இலங்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கொன்றின் போது இருவரும் இறந்திருப்பதாக இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தது. ஆனால், பிரபாகரனின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. பொட்டுஅம்மானின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. நீதிமன்றம் இந்த உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்டது.
இந்தத் தகவலை ஏற்றுக்கொள்ளவில்லை என இந்தியா அறிவித்திருந்தது. பொட்டுஅம்மானின் உடல் கண்டுபிடிக்கப்படாமையால் அவரின் மரணச்சான்றிதழை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா மறுத்திருந்தது. பிரபாகரனின் மரணச்சான்றிதழை ஏற்றுக்கொள்வது தொடர்பாக அவரின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஆதாரத்தை இந்தியா கோரியிருந்தது. பின்னர் பொட்டுஅம்மானை தேடும் நடவடிக்கைகளை நோக்கி இந்தியாவின் புலனாய்வு சேவைத்துறை தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொட்டுஅம்மானுடன் இருந்த நபரொருவரிடமிருந்து துப்பொன்றை இந்திய புலனாய்வுத்துறை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பொட்டுஅம்மானுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். அதற்காக பொட்டுஅம்மான் அவசர சிகிச்சையைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர் வெளியேறியிருந்ததாகவும் அவர் அடைந்திருந்த காயத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிடின், அவர் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என அந்த நபர் ஊகித்திருந்தார். அத்துடன், தப்பிச்செல்லும்போது பொட்டுஅம்மான் இறந்திருக்கக்கூடும் என்ற ஊகத்தையும் அந்த நபர் கொண்டிருந்தார்.
இந்தியப் புலனாய்வு சேவையினரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்தத் தகவலின் பின்னர் பொட்டுஅம்மான் இப்போதும் உயிருடன் இருக்க முடியுமென்ற நம்பிக்கை இந்திய அரசாங்கத்தின் தரப்பில் காணப்படுகிறது.
பொட்டுஅம்மான் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்பது தொடர்பாக மர்மம் சூழ்ந்திருப்பதாக முன்னணித் தமிழ்ச் சஞ்சிகையான ஆனந்தவிகடன் தெரிவித்திருந்தது.
சில காலத்திற்கு முன்னர் இலங்கைக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தபோது பொட்டுஅம்மான் பற்றிக் கேட்டுள்ளதாக அந்தச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த பஷில் ராஜபக்ஷ,பிரபாகரனின் உடலை பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டபோதிலும் பொட்டுஅம்மான் தொடர்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளும் விடயம் குறித்து எதனையும் கூறியிருக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்தச் சஞ்சிகையில் பிரபாகரனினதும் பொட்டுஅம்மானினதும் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது புலிகள் சார்பு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2009 மே 18 இல் யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரபாகரன்,பொட்டுஅம்மானை தமிழ்ப்புலிகளின் பிரதித் தலைவராக நியமித்திருந்ததாகவும் அந்த நிகழ்வில் தமிழ்ப்புலிகளின் தலைவர்கள் சகலரும் கலந்துகொண்டதாகவும் இந்த நியமனத்திற்கு அவர்கள் யாவரும் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்திருந்ததாகவும் அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர் புலிகள் மூன்று குழுக்களாக தனித்தனியாக வேறுபடுத்தப்பட்டனர். ஒரு குழுவினர் முன்னேறி வரும் இராணுவத்தை பின்வாங்கிச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இரண்டாவது குழு மோதல் களத்திலிருந்து வெளியேறவிருந்தது. மூன்றாவது குழு இராணுவம் ஊடுருவி வருகையில் சரணடைவதற்குத் தயாராகவிருந்தது. பிரபாகரன் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். இந்தத் திட்டத்திற்கு அங்கு சமுகமளித்திருந்த யாவரும் இணங்கியிருந்தனர் என்றும் அச்சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் செல்லும் குழுவில் பொட்டுஅம்மான் இடம்பெற்றிருந்தால் அவர் எங்கே? இந்தக் கேள்வியானது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் பிரதான விடயமாகக் காணப்படுவதாக அந்தச் சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. பொட்டுஅம்மான் எரித்திரியாவில் இருப்பதாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்ப்புலிகளின் நிதிகள்,சொத்துகள்,வர்த்தகத் தொழிற்துறைகள் எரித்திரியாவில் இருப்பதாக அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். ஆயினும், அதனை எரித்திரிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். புலிகளின் சர்வதேச மட்டத்திலிருப்பவர்களிடையே ஏதாவது கருத்து வேறுபாடு இருப்பது தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் கவனத்தில் எடுக்குமானால் அது பொட்டுஅம்மான் உயிருடன் இருக்கிறார் என்பது பற்றிய கருத்தாகவே காணப்படுவதாகவுள்ளது. அவர் பகிரங்கமாக இப்போது வெளிவரும் சாத்தியமில்லை. பொட்டுஅம்மான் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்த பின்பே அவருக்குப் பயந்து கே.பி. இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மத்தியில் ஊகங்கள் காணப்படுகின்றன.
2002 இல் கே.பி. தனது பதவியிலிருந்தும் அகற்றப்பட்டிருந்தார். அந்த இடத்திற்கு காஸ்ட்ரோ நியமிக்கப்பட்டிருந்தார். பொட்டுஅம்மானுக்கு உதவியாளராக காஸ்ட்ரோ இருந்தவர். யுத்த வேளையின் போது காஸ்ட்ரோ தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. ஆயினும் பொட்டுஅம்மானால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சர்வதேச மட்டத்திலான புலிகளின் அமைப்பானது தற்போதும் இயங்குவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. கே.பி. பிடிபட்டிருந்த போதிலும் சர்வதேச மட்டத்திலான புலிகளின் கட்டமைப்பு குலைக்கப்படவில்லை. இது உயிருடன் இப்போதும் இருந்து வருபவர்கள் மத்தியில் பொட்டுஅம்மானும் உள்ளார் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பொட்டுஅம்மானின் பெயரானது இன்ரபோலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது சாத்தியாமானதாகும். ஏனெனில் அவரின் மரணம் தொடர்பான நிலை நிச்சயமற்றதொன்றாகக் காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பிரகாரம் அவரின் மரணம் தொடர்பாக நிச்சயமற்றதன்மை உள்ளது. இன்ரபோலின் பட்டியலில் பொட்டுஅம்மானுடன் தொடர்புபட்டவர்களாக சார்ள்ஸ் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இவர்கள் யார்? வேறு இருவருடன் பொட்டுஅம்மான் வெளியேறியது தொடர்பான ஏதாவது துப்பை அரசாங்கம் கொண்டுள்ளதா? பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் புரிந்துகொண்டாலும் யாவற்றுக்கும் மேலாக இந்த விடயம் தொடர்பான சகல சந்தேகங்களும் மறைந்துவிடுகிறது. இதன் பெறுபேறு தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்கும் என்பதனை கற்பனை செய்து பார்ப்பது சாத்தியமற்றதொன்றாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக