ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு

துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு எலும்புக்கூடுகளை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். இவை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது சடலங்கள் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். துன்கிந்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவரினால் பதுளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் விரைந்து இவ்விரு எலும்புக்கூடுகளையும் மீட்டுள்ளனர். பதுளை-சிரிமல்கொட கிராமத்தில் வசித்துவந்த 21வயது நிரம்பிய டி.எம். சமந்தகெலும் என்ற படைவீரரினதும் ஆலி-எலைப் பகுதியில் ரோக்கத்தன்னை தோட்டத்தில் வசித்துவந்த 24வயதினையுடைய முத்துக்குமார் கீதா என்ற தமிழ்யுவதியுமே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களென இனம் காணப்பட்டுள்ளது. இத் தற்கொலைகள் ஒரு மாதத்திற்குமுன் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நைலோன் நூலினால் கழுத்துக்கள் சுருக்கிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலங்கள் அருகே இருந்த உடைப்பைகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்விருவரின் தற்கொலைகள் என்ன காரணத்தினால் ஏற்பட்டதென்பது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிரப் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக