வியாழன், 15 மே, 2014

வரவு செலவுத் திட்ட தோற்கடிப்பு விவகாரம் தமிழரசுக் கட்சியின் செயலாளரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்கிறார் சுரேஷ்!!!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சில உள்ளூராட்சி சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கக் காரணமாகவிருந்த, கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மீது, தமிழரசுக் கட்சியின் செயலாளரே ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வடக்கில் கூட இது நடக்கவில்லை." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று கல்முனையில் நடைபெற்றது. இதன்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட காரைதீவு பிரதேச ஆலயங்களின் அறங்காவலர் ஒன்றிய செயலாளர் எஸ்.விஜயரட்ணம் இது தொடர்பான கேள்வி ஒன்றை எழுப்பினார். "காரைதீவு பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டதாகவேயுள்ளது. நாம் கூட்டமைப்புக்கு வாக்களித்தே உறுப்பினர்களைத் தெரிவு செய்தோம்.

ஆனால் கட்சி செயலாளர் மாவை சேனாதிராசா எழுத்து மூலமும், நேரிலும் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கியும், எமது ஊர்க்கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை தோற்கடித்து கட்சிக்கும், ஏன் எமது ஊருக்கும் பெரும் துரோகமிழைத்துள்ளனர். கட்சியின் வவுனியாகக் கூட்டத் தீர்மானப் படி இவ்வாறு துரோமிழைத்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கட்சியை விட்டும், உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கவேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. எமது அறங்காவலர் ஒன்றியம், காரைதீவு பிரதேச சபை மூன்று உறுப்பினர்கள் மீதும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் வலியுறுத்தியதுடன், நாம் திருமலை சென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரிடமும் நேரில் வலியுறுத்தினோம்.

ஆனால் மாதங்கள் பல கடந்தும் இதுவரை இத்தகைய உறுப்பினர்கள் மீது காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?" - இவ்வாறு அறங்காவலர் ஒன்றியச் செயலாளர் கேள்வி எழுப்பினார். மேலும் சிலரும் இந்த விடயத்தில் கேள்விக் கணைகளைத் தொடுத்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பதிலளித்துப் பேசினார்.

"உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தாலும் துரதிஷ்டவசமாக, பதிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சி சார்பிலேயே போட்டியிட்டோம். கட்சி உறுப்பினர்களே வரவு செலவுத் திட்டங்களைத் தோற்கடித்த விவகாரத்தில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்குமாறு நாம் எப்போதோ ஒப்புதல் கொடுத்துவிட்டோம். ஆனால் தமிழரசுக் கட்சியின் செயலாளர்தான் இதில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வடக்கில் கூட எதுவும் நடக்கவில்லை. 100 வீதம் இது விடயமாக தமிழரசுக் கட்சியின் செயலாளரிடம்தான் கேட்க வேண்டும். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தவறினால் அது பிழையான விடயமாக அமையும். விரைவான நடவடிக்கை அவசியம்" - என சுரேஷ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக