வியாழன், 15 மே, 2014

பாப்பரசரின் வருகை சர்வதேச நிகழ்ச்சி நிரலின் உச்ச மட்ட இலக்கை பூர்த்தி செய்வதே.. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சந்தேகம்!!!

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் இலங்கைக்கான உத்தேச விஜயம் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் உச்சமட்ட இலக்கைப் பூர்த்தி செய்யவே என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சந்தேகத்தை வெளியிட்டதுடன், தனது வருகையின்போது பாப்பரசர் வட பகுதிக்கு செல்லக்கூடுமெனவும் அவ்வாறு சென்றால் மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்களைச் சந்திக்க நேரிடும் எனவும் அத்தனையதொரு நிகழ்வு இடம்பெறுமானால் அந்த இரு ஆயர்களினதும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு உரம் ஊட்டுவதாக அமைந்துவிடும்
என்றும் எச்சரித்திருக்கிறது.

 2015 ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தருவதாக பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெவித்துள்ளதையடுத்து நாட்டின் பல்வேறு சமூகத் தளங்களில் பல்வேறுபட்ட கருத்துகளும் எதிர்ப்புகளும் எழுந்தவண்ணம் உள்ளன.


இது தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கே.எம். வசந்த பண்டாரவை தெரிவிக்கையில்,
 உலக கிறிஸ்தவர்களின் மதிப்புக்குரிய பாப்பரசர் இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்க வருவாராயின் அது இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பாகும். ஆனால் இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் மதவழிபாடு என்ற போர்வையில் சர்வதேச நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காகத்தான் வருகிறாரோ என்ற சந்தேகம் எம்முன் எழுந்துள்ளது.


கடந்த சில தினங்களுக்குமுன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாப்பரசர் இலங்கையில் மதப்பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தமது வருகைக்கு முன் அப்பிரச்சினை தீர்க்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்க வரும் பாப்பரசர் பிரான்சிஸ் அரசியல் திட்டவரைபுடனேயே வரப்போகிறார் என்பது குறித்து எமக்கு சந்தேகம் எழுகின்றது. பாப்பரசர் கூறுவது போன்று இலங்கையில் மதப் பிரச்சினையேதும் மக்கள் மத்தியில் கிடையாது.


எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து சர்வதேச நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையின் நல்லிணக்க விவகாரங்களில் சர்வதேச நாடுகள் நேரடியாகத் தலையிட ஆரம்பிக்கின்றன. அதாவது இலங்கையில் நல்லிணக்க விவகாரங்கள் தொடர்பில் தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது. ஜூன் மாதம் ஆரம்பிக்கத் தொடங்கும் சர்வதேச நாடுகளின் நேரடித் தலையீடு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடச்சியாக நீடிக்கும்.


பாப்பரசரின் வருகை வரை சர்வதேச நேரடி தலையீடு நீடிக்கும். அத்துடன் இலங்கையில் மத விவகாரம் தொடர்பில் கடுமையான விமர்சனமொன்றை விமர்சித்து விட்டு இலங்கை வரவிருக்கும் பாப்பரசர் சர்வதேச நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவுள்ளார். இவரின் வருகை இலங்கையில் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் உச்சக் கட்ட இலக்கைப் பூர்த்தி செய்வதாகவே அமையும்.
 கூரான கத்தியைக் கொண்டு காய்கறியும் வெட்டலாம் , கழுத்தையும் வெட்டலாம். பாப்பரசரின் இலங்கை விஜயம் கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம். அதேவேளை இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பாதிப்பினையும் ஏற்படுத்தலாம்.


ஆனால் இலங்கை வரும் பாப்பரசர் பிரான்சிஸ் 90 சதவீதம் அரசியல்திட்ட வரைபுடனேயே வருகிறாரென்பது அண்மையில் அவர் வெளியிட்ட கருத்துகளில் தெளிவாகத் தெரிகின்றது.


அத்துடன் பாப்பரசர்களில் முதலாம் பிரான்சிஸ் சற்று வேறுபட்டவர் என்பதும் அவர் சிவில் சமூகத்தின் மத்தியில் தமது மத சேவைகளைக் கொண்டு செல்கின்றாரென்பதும் அனைவரும் அறிந்ததொரு விடயமாகும். அந்த வகையில் இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் வட பகுதிக்குச் சென்று அங்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தையும் சந்தித்துப் பேசலாம். இச்சந்திப்பு இராயப்பு ஜோசப் மற்றும் தோமஸ் சௌந்தரநாயகத்தினால் முன்னெடுக்கப்படும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு போசாக்களிக்கலாம். இறுதியில் அரசாங்கமும் மக்களும் கைகட்டி வாய்பொத்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக