சனி, 2 ஜனவரி, 2010

இந்திய சிறையில் உள்ள கணவனை பார்வையிட அகதியாக சென்ற இலங்கை பெண்..!!

இலங்கை தலைமன்னாரிலிருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு படகில் புறப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா(60), விஜிதா(30) இவரது குழந்தைகள் உட்பட 5 அகதிகள் நேற்று அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர். அங்கிருந்து தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை, போலீசார் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாம் அனுப்பி வைத்தனர். விஜிதா கூறியதாவது: கணவர் ராஜ்குமார். இரண்டு ஆண்டுக்கு முன் இங்கு வந்தவர் சிறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இலங்கையில் சண்டை முடிந்த பின் ,முகாமில் அடைக்கப் பட்ட எங்களை, இரண்டு மாதத்திற்கு பின் ராணுவம் விடுவித்து, மன்னாருக்கு அனுப்பி வைத்தது. இரண்டு மாதம் மன்னாரில் குழந்தைகளுடன் இருந்தேன். இங்கு சிறையில் இருக்கும் கணவரை பார்க்க நேற்று படகில் அகதியாக வந்தேன், என்றார். தமிழக அகதிகள் முகாம்களில் இருக்கும் தமிழர்கள், இலங்கைக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக