
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வை அரச ஊடகமான ரூபவாஹினி மிகவும் பக்கச் சார்பான விதத்தில் ஒளிபரப்புச் செய்ததாக சுதந்திரமாகன நேர்மையான தேர்தலுக்கான பிரசார அமைப்பு (கபே) தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் எதிர்வரும் பிரச்சாரங்களில் தனியொரு வேட்பாளர் அரச ஊடகங்களில் அளவுக்கதிகமான முக்கியத்துவம் பெறுவதை தடுக்குமாறும் கோரியுள்ள கபே அமைப்பு அரச ஊடகங்களைக் கண்காணிப்பதற்குத் தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமிக்குமாறும் கோரியுள்ளது. கபே அமைப்பு தனது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு 17ம் திகதி இடம்பெற்றவேளை அது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட விதம் குறித்து எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை ஒளிபரப்புச்செய்யும் உரிமை அரசின் ரூபவாஹினி அலைவரிசைக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை மிகவும் பக்கச்சார்பான விதத்தில் ஒளிபரப்பு செய்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் போது அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனினும் வியாழக்கிழமை ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டது சிலவேட்பாளர்களின் பெயர்களோ படங்களோ காண்பிக்கப்படாத அதேவேளை சில வேட்பாளர்களின் பெயர்களுக்கும் படங்களுக்கம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை இந்த நிகழ்வு பக்கச்சார்பான விதத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை நன்கு புலப்படுத்துகிறது மேலும் குறிப்பிட்ட ஒளிபரப்பின் போது அறிவிப்பாளர்கள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரின் பிரச்சார கோஷத்தை பலமுறை குறிப்பிட்டனர். இது பக்கச்சார்பற்ற ஊடக செயற்பாடுகள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது. வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு முற்றுமுழுதாக பக்கச்சார்பான விதத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டமை சுட்டிக்காட்ட விரும்பும் கபே அமைப்பு குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசைக்கு மாத்திரம் உரிமை வழங்கப்பட்டதாலேயே இந்த நிலைமை உருவானது என்பதை வலியுறுத்த விரும்புகிறது. மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை அரசஊடகம் கையாண்ட விதம் அரச ஊடகத்தின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்குத் தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக