வெள்ளி, 22 மே, 2015

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம்.! (படங்கள் இணைப்பு)

மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என கைதாகியிருப்பவர் சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். 

ஆயினும், மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படமாக எமது அமைப்பைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் என்கின்ற சுவிஸ் ரஞ்சன் அவர்களின் புகைப்படத்தினை சில விசமிகள் பிரசுரித்திருக்கின்றார்கள் என்பதை இணையத்தளங்களிலும் சில முகநூல்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

எமது அமைப்பைச் சேர்ந்த திரு. ரஞ்சன் என்பவருடன் எமது தலைவர் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள் இருக்கும் புகைப்படங்களைப்; பிரசுரித்து அதில் எமது அமைப்பைச் சேர்ந்த ரஞ்சன் அவர்களை இவர்தான் குமார் என பொய்யாக இட்டுக்கட்டி அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல.

சில அரசியல் இலாப உள்நோக்கம் கொண்டவர்கள் ஏனைய தமிழ் அரசியல் பிரமுகர்கள்மீது திட்டமிட்டு சேறுபூசும் அல்லது அவர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் சில அரசியல் பிரமுகர்களின் பின்னணியில் இயங்கும் இணையத்தளங்களையும், முகநூல் பாவனையாளர்களையும் பயன்படுத்தி இந்த கீழ்த்தரமான ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நடவடிக்கையானது மாணவி வித்தியாவின் கொலையை மலினப்படுத்துவதோடு அவரின் நெருங்கிய உறவினர்களையும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்த வேதனைக்குள் தள்ளும் என்பதை இச்செயலைச் செய்பவர்கள் உணராதிருப்பது வேதனையானதே. இவ்வாறான மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

இணையத்தளங்களில் காணப்படும் எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அவர்களின் புகைப்படங்களை நாம் கீழே தருகின்றோம். இப் புகைப்படங்களாவன மாணவி வித்தியாவுக்காக தற்போது சுவிஸில் நடைபெற்றுவரும் அஞ்சலிக் கூட்டங்களில் திரு. சுவிஸ் ரஞ்சன் அவர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டவையாகும்.

இப் புகைப்படங்கள் திரு. ரஞ்சன் அவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் குமார் அல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பதுடன் இந்த ஆள்மாறாட்டக்காறர்களின் செயலையும் அம்பலப்படுத்தி நிற்கின்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக