வியாழன், 13 நவம்பர், 2014

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை…!!

வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், விண்கலத்தை அனுப்பியது.

ரோசெட்டா என்ற அந்த விண்கலம், கடந்த 2004-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனுடன் ‘பிலே’ என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் விண்கலமும் பொருத்தி அனுப்பப்பட்டது. ரோசெட்டா விண்கலம், மணிக்கு 66 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணம் மேற்கொண்டது. பூமியில் இருந்து 640 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள அந்த வால் நட்சத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு ரோசெட்டா விண்கலம் அடைந்தது.

நேற்று காலை முக்கிய கட்டத்தை அடைந்தது. ஜெர்மனி நாட்டின் டாம்ஸ்டட் நகரில் உள்ள தரை கட்டுப்பாட்டில் உள்ள விஞ்ஞானிகள், ரோசெட்டா விண்கலத்தில் உள்ள ‘பிலே’ விண்கலத்தை விடுவித்தனர். இதையடுத்து, வால் நட்சத்திரத்தை ‘பிலே’ அடைவதற்கான 7 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ தொடங்கியது. விஞ்ஞானிகள் பதற்றத்துடன் அதை கவனித்து வந்தனர்.



இந்நிலையில், சர்வதேச நேரப்படி, நேற்று மாலை 4.03 மணிக்கு வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தில் ‘பிலே’ விண்கலம் இறங்கியது. பனியும், தூசியும் நிறைந்த அதன் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டது. அதைத் தொடர்ந்து, தரை கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் அனுப்பியது.

அதைப் பெற்ற விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வால் நட்சத்திரத்தில், விண்கலம் ஒன்று இறங்குவது இதுவே முதல்முறை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக