சனி, 21 ஜூன், 2014

இலங்கை நிலைவரம் குறித்து ஐ.நா. - கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் அலசி ஆராய்வு!!

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நீண்ட பேச்சை இன்று நடத்தினர். பேச்சு நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் முற்பகல் 11.15 மணி வரை இந்தப் பேச்சு நடைபெற்றது. இதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பேருக்குப் பின்னர் இலங்கை உறுதியளித்த விடயங்கள் சரிவரக் கையாளப்படவில்லையென ஐ.நா.அதிகாரிக்கு எடுத்து விளக்கப்பட்டது. குறிப்பாக, ஐ.நா.செயலாளர் பான் கி மூனுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் மூன்று முக்கிய விடயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போது இடம்பெற்றக் கூறப்படும் மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் இன்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல். ஆகிய மூன்று விடயங்களும் இலங்கை அரசால் பொறுப்பான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.

அத்துடன், வடக்கு மாகாண சபையைச் சுதந்திரமாக இயக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடபகுதியிலுள்ள காணிகளை அரசு கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், இராணுவத் தலையீடுகளால் மக்களுக்கு ஏற்படும் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ.நா.அதிகாரிக்கு விளக்கினார். இந்தச் சந்திப்பு நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக