புதன், 18 ஜூன், 2014

இலங்கை மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும்; பான் கீ மூன் வேண்டுகோள்!!

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன், சகல இலங்கை மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து கவனம்
செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானத்திற்கு அமைவாக சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் பொலிவியாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாட்டின் போது, ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூனை ஜனாதிபதி மகிந்த சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தியிருந்தார்.

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக