புதன், 21 மே, 2014

இசைப்பிரியாவுடன் இருப்பது எங்கள் பிள்ளை: உஷாளினியின் பெற்றோர் தெரிவிப்பு...!!!!

முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாளினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.
இசைப்பிரியாவுடன் இருந்த மற்றுமொரு பெண் தொடர்பில் ஊடகங்களின் வெளியான புகைப்படத்தை காண்பித்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு பிரிவினருடன் இராணுவத்தினரும் சென்றதாக

தெரிவிக்கப்படுகின்றது.



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய சோபனா தர்மராஜா என்றழைக்கப்படும் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றறோர் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு யுவதியுடன் இசைப்பிரியாவின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதை அடுத்தே அந்த புகைப்படத்தில் இருக்கின்ற மற்றைய யுவதி தங்களுடைய மகளென அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவருடைய பெற்றோரான குணலிங்கம், செல்வராணி தம்பதியர் தெரிவித்ததாவது,

இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எங்களது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். எங்களுடைய மகள் காணாமற்போனமை தொடர்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு தரப்பினரிடம் நாம் முறைப்பாடு செய்திருந்தோம்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும் இது தொடர்பில் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம்.

எங்களுக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் எமது மூத்தமகள் உஷாளினி, கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி மல்லாவி யோகபுரத்தில் பிறந்தார். தரம் 6 வரையில் மல்லாவி பாலிநகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த இவர், தொடர்ந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தனது கல்வியினைத் தொடர்ந்தார்.

அவர் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அதாவது 2008ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே உஷாளினி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டார்.

புலிகள் அமைப்பில் அவர் இணைக்கப்பட்டதன் பின்னர், மகளுடன் எங்களுக்கு இருந்த தொடர்பு குறைந்தது. இந்நிலையில் நாம் எங்கள் பிள்ளையினை 2009ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் சந்தித்தோம். அதன்பிறகு எங்கள் மகளை நாங்கள் காணவில்லை.

பின்னர் நாங்கள் 2009 மே 17ம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். அப்போதுகூட, எமது மகள் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது பற்றி அறியாமல் இருந்தோம். இதனால், வவுனியாவில் சர்வதேச செஞ்சிலுவை குழுவிலும் குருமன்காட்டிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் எமது மகள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்தோம்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி, எமது வீட்டுக்கு வந்த மல்லாவியைச் சேர்ந்த நபர் ஒருவர், உங்கள் மகள் உயிருடன் 4ம் மாடியில் இருக்கிறாள் என்றும் செலவிற்கும் விடுதலைக்குமாக பணம் தரும்படியும் கூறி மகள் கைப்பட எழுதிய கடிதமொன்றினை எங்களுக்கு காண்பித்தார்.

அதனை நம்பி நாங்கள் ஒரு இலட்சம் ரூபா பணமும் தோடு ஒன்றையும் அவரிடம் வழங்கினோம். இருந்தும் அதற்கான பயன் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாங்கள் எங்கள் மகள் பற்றி சாட்சியமளித்தோம்.

இந்நிலையில் இம்மாதம் 19ம் திகதி ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் இசைப்பிரியாவுடன் எமது மகள் இருப்பதை கண்டோம். அதன்பிறகே எங்கள் மகள் கொல்லப்படவில்லை என்றும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதனை அறிந்துகொண்டோம்.

இசைப்பிரியா கொல்லப்பட்டமையை புகைப்படங்கள் மூலம் அறிந்தோம். இருந்தும் எமது மகள் கொல்லப்படவில்லையென்றும் இன்னமும் எமது மகள் உயிருடன் இருக்கின்றாள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக