சனி, 23 அக்டோபர், 2010

வங்காள விரிகுடாவிலும், பிலிப்பைன்ஸ் கடலிலும் உருவாகியுள்ள தாழமுக்கங்கள் இலங்கையில் மழை வீழ்ச்சியைத் தாமதப்படுத்தியுள்ளது..!

வங்காள விரிகுடாவிலும், பிலிப்பைன்ஸ் கடலிலும் உருவாகியுள்ள தாழமுக்கங்கள் இலங்கையின் இடைப்பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சியைத் தாமதப்படுத்தியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடா வருடம் மார்ச், ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடைப்பருவப்பெயர்ச்சி மழைபெய்வது வழமையாகும். இருப்பினும் இம்முறை ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியாகியும் கூட இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை இற்றைவரை ஆரம்பமாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வங்காள விரிகுடாவில் கிரி என்ற சூறாவளியும், பிலிப்பைன்ஸ் கடலில் மெகி என்ற சூறாவளியும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இலங்கை ஊடாக வீசும் காற்று வேகமடைந்துள்ளது. இது இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சியைத் தாமதமடையச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் வட பகுதியிலிருந்து 800 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உருவாகியுள்ள கிரி சூறாவளி பங்களாதேசம் மற்றும் மியன்மார் நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று அல்லது நாளை நிலப்பகுதியை அடைய முடியும். இச் சூறாவளி காரணமாக இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படாது. மேலும் இவ்விரு சூறாவளிகள் காரணமாகவும் இலங்கையின் தெற்கு, தென் மேற்கு, வட கிழக்கு கடற்பரப்புக்கள் அடிக்கடி கொந்தளிப்பு அடைய முடியும். இச்சமயம் மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் இந்நிலைமையும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக