சனி, 23 அக்டோபர், 2010

களுவாஞ்சிக்குடியில் ஆலய உற்சவத்தில் போதைப்பொருள் விற்ற இருவருக்கு விளக்கமறியல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் உற்சவத்தின்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கலந்த பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இராமக்கமலன் சிறைத் தண்டனை விதித்துள்ளார். கடந்த 19ம் திகதி கோயில்போரதீவு பிரதேசத்தில் உள்ள பத்திரகாளியன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இந்த போதைப்பொருட்கள் கலந்து பொருட்களை விற்பனைசெய்த இருவரையே கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்துள்ளார். கல்முனை தரவைக்கோவில் வீதியை சேர்ந்த முகம்மது சலாரூதீன் முகம்மது இர்ஸாத், நாகவில்லு, பலாரிய, புத்தளம் பகுதியைச் சேர்ந்த முகம்மது முசார் முகம்மது முபாரீஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து பாபுல் பக்கட்டுகள் -09, கஞ்சா கலந்த போயிலை 2171 கிராமைக்கொண்ட 05 பக்கட்டுகள், கலர் பாக்குத் துண்டுகள் 1477 கொண்ட 10 பக்கட்டுகள், போதைப்பொருள் கலந்த தேங்காய்ப்பூ 4039 கிராமைக்கொண்ட 10 பக்கட்டுகள் உட்பட பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி இராமக்கமலன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக