ஞாயிறு, 17 அக்டோபர், 2010

புதிய தேர்தல் முறைமையின்கீழ் உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்..!

புதிய தேர்தல் முறைமையின்கீழ் உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்குச் சிறுபான்மை சமூகங்கள் தயாராக வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதும் அதில் சாட்சியமளித்துத் தமது வட்டார எல்லையை உறுதிப்படுத்த வேண்டுமென்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ.பீ.தேவராஜ் தெரிவித்துள்ளார். மலையகத்தில் எல்லை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்தும், எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ரீதியான குழுக்கள் மக்களின் சாட்சியங்களைப் பெற் றுக்கொள்ளவுள்ளது. இதில் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தேவராஜ் தெரிவித்தார். சாட்சியங்களை வழங்கி தமது வட்டார எல்லையைச் சரியாகப் பிரித்தொதுக்குவதற்கு உறுதுணைபுரிய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வட்டார எல்லையைச் சரியாக நிர்ணயம் செய்வதன்மூலம் உள்ளூராட்சி நிர்வாகம் வலுப்பெறுமென்றும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதில் வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழ்மக்களும், அம்பாறை மாவட்டத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் உள்ளுராட்சி வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்கான யோசனைகளை மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான தேவராஜ் சமர்ப்பித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக