புதன், 20 அக்டோபர், 2010

இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்..!

இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. உரிய அங்கீகாரமில்லாமல் இவர்கள் தொழிலாளர்களாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் பரிசாரகர்களாகவும் பணிபுரிவதாகவும் பல்வேறு நகரங்களிலுள்ள உணவுச் சாலைகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புள்ளி விபரம் "உத்தியோகபூர்வ மதிப்பீடுமூ27 என்று கூறியுள்ள அந்த ஊடகம், அதேசமயம் உண்மையான தொகையை நாட்டின் குடிவரவுத்துறைத் தலைவர் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் தொடர்பாகக் குறிப்பிட்ட சோதனைகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம் என்று குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாலநந்த பெரேரா கூறியதாக அந்த ஊடகம் மேற்கோள்காட்டியுள்ளது. மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நான் விபரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதே இது கடினமானதாக்கிவிடும் என்று அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகள் 85 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிலர் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் முன்கூட்டியே விசா அனுமதி பெற்று வந்த வெளிநாட்டவர்கள் விசா முடிந்த பின்னரும் அதிக காலம் தங்கியிருப்பதும் பணியாற்றுவதும் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் போன்ற துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் உல்லாசப் பயணிகள், சேவைத்துறையை நாடுவோர் அதிகளவுக்குச் செல்லும் இடங்களாக இருப்பதுடன் அந்நாடுகளைச் சென்றடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளன. தெற்காசியாவுக்கான சுற்றுலா, சேவைத்துறையை வழங்கும் நாடாக வருவதற்கான அபிலாஷைகளை இலங்கையும் கொண்டுள்ளதுடன் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்துவருகிறது. சட்ட ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பணியாளர்கள் செல்வத்தை விருத்தி செய்ய உதவுகின்றனர். பரஸ்பர அனுகூலமான ஒப்பந்தத்தின் பிரகாரம் சேவைகளை வழங்க அவர்கள் முன்வருகின்றனர். விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் அதிக காலத்துக்குத் தங்கியிருப்பது குற்றமாகும். ஆனால், வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. பாதிப்பில்லாத குற்றங்களை குற்றமற்றவையாக்க வேண்டுமென சுதந்திரமான சமூகங்கள் விரும்புகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக