ஞாயிறு, 23 மே, 2010

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் சூழல் குறைவு..!!

ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை, செயற்குழு அங்கீகரித்துள்ள போதிலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. செயற்குழுவின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது அக்குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் குழுக்கள் உருவாகி பகைமை ஏற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாலாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்சியின் செயலர், பொருளாளர் தவிர்ந்த (தலைவர் உட்பட) அனைத்துப் பதவிகளையும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்ய வேண்டுமென்ற பரிந்துரையை செயற்குழு அங்கீகரித்துள்ளது. அவ்வாறு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதாயின் கட்சியின் யாப்பினை மாற்றியாகவேண்டும். அதற்கும் செயற்குழு இணக்கம் கண்டிருந்தாலும் யாப்பை மாற்றுவதற்கு 75வீத ஆதரவு அவசியம் எனக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு கட்சியின் யாப்பில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தின்படி, தலைவராக இருப்பவர் இராஜினாமா செய்வதன்மூலம் வெற்றிடம் ஏற்படாலொழிய தேர்தல் நடத்த முடியாது. இந்நிலையில் யாப்பினை மாற்றுவதற்கு 75வீத ஆதரவு கிடைக்கும் என்பது அந்தளவு சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, கட்சியை மறுசீரமைப்பதென்பது வெறும் சலசலப்பாகவே முடியும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக