புதன், 21 ஏப்ரல், 2010

அமைச்சரவை நியமனத்தின் பின் ஜனாதிபதி பூட்டான் விஜயம்..!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். பூட்டானில் எதிர்வரும் 23ம் திகதிமுதல் 29ம் திகதிவரை நடைபெறவிருக்கின்ற 16வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காவே ஜனாதிபதி அங்கு செல்கிறார். சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் உச்சி மாநாடு ஏப்ரல் 28, 29ம் திகதிகளில் திம்புவில் நடைபெறும். 2008 ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைக்கிறார். 16வது சார்க் உச்சிமாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 15வது சார்க் உச்சி மாநாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் நாட்டு தலைவர்களுடன் பூட்டானில் வைத்து முக்கிய சந்திப்பில் ஈடுபடுவார் என்றும் முக்கியமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விசேடமாக கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக