புதன், 24 மார்ச், 2010

விண்ணப்பிக்க தவறிய இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வவுனியாவில் விசேட கருமபீடம்..!

இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கென வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான திருமதி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டு வாக்களிப்பதற்கு தகுதிபெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவுசெய்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து வசதியும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எனினும், இடம்பெயர்ந்துள்ளவர்களுள் வாக்களிக்க தகுதிபெற்ற, விண்ணப்பிக்கத் தவறிய, அல்லது விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும், விசேட வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவும், இலவச போக்குவரத்து வசதிகளை செய்துகொடுக்கவும் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி வவுனியா மெனிக்பாம், நிவாரணக் கிராமங்களிலும் செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கரும பீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரசஅதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. மேற்படி, கருமபீடங்களில் தாம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளவர் என்பதையும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர் என்பதை தெரிவித்து வாக்களித்துச் செல்லவேண்டிய வாக்களிப்பு நிலையம் எது என்பதற்கான சான்றையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக