செவ்வாய், 16 மார்ச், 2010

கண்டி எனது சொந்த பூமி மஹியாவையில்: மனோ கணேசன்..!

பேரினவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் சலசலப்புக்கும் அஞ்சி ஓடும் ஒரு கோழையல்ல நான் என கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மஹியாவைக்கு விஜயம் செய்த மனோ கணேசனுக்கு மக்கள் மேள தாளங்களுடன் அமோகமாக வரவேற்பளித்தனர். மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், “கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவே நான் கண்டியில் போட்டியிடுகிறேன்.
நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வீட்டிலிருந்தே இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் கண்டி மாவட்ட மக்கள் இழந்த பிரதிநிதித்துவ உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன். நான் கொழும்பில் இருந்து கண்டிக்கு வரவில்லை. கண்டி எனது சொந்த பூமி. எனது மண்ணுக்கே நான் மீண்டும் வந்துள்ளேன்.
எனக்கு இலவசமாக சில விளம்பரங்களும் பிரபல்யங்களும் கிடைத்துள்ளன. அது எனது எதிரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டவை.அவற்றை மேலும் மேற்கொள்ளுமாறு நான் அவர்களிடம் வேண்டுகிறேன். ஹெலஉறுமயவைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராகக் கோஷம் எழுப்பினர். நாவலப்பிட்டியில் எனது வாகனத்திற்குச் சேதம் ஏற்படுத்தினர். இவை இரண்டும் எனக்குக் கிடைத்த இலவச விளம்பரங்களாகும். எனவே இத்தகைய முயற்சிகளைத் தொடருமாறு எனது எதிரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக