வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஜனாதிபதி ஆதரவு விடயத்தில் மாற்றமில்லையென சி.சந்திரகாந்தன் தெரிவிப்பு..!!

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்கனவே எடுத்துள்ள முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அந்த அடிப்படையில் தான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று வாகரைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களான பனிச்சங்கேணி, இராலோடை, ஆலங்குளம் ஆகிய கிராமங்களில் தமது பிரச்சார பணிகளை மேற்கொண்டிருந்த அவர் அங்கு நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது கட்சியானது நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதென தீர்மானித்துள்ளது. இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. எமது கட்சியினை பொறுத்தவரை நாம் எடுத்திருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவில் எந்த மாற்றமும் இராது. இந்த முடிவானது கிழக்கு மாகாண மக்கள் அனைவருக்குமே ஒரு தீர்க்கமான முடிவினை எட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்பது எமது கட்சியின் எண்ணப்படாகும். எனவே நடைபெறவுள்ள ஜனரிதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ விற்கு ஆதரவு வழங்குவதன்மூலம் எமது நாட்டிற்கு மீண்டும் ஒரு சரியான தலைவரை தேர்ந்தெடுத்த பெருமைக்குரியவர்களாக மாறுவதோடு, நலிவடைந்துள்ள எமது கிழக்கு மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்வதாகவும் இருக்கும். தற்போது சில ஊடகங்களில் எமது கட்சியைத் தொடர்புபடுத்தி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக உண்;மைக்கு புறம்பான கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை கண்டு எமது மக்கள் எந்த ஒரு தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. உறுதியாக எமது கட்சி எடுத்திருக்கின்ற முடிவினை எமது மாகாண மக்களும் ஏற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக