புதன், 20 ஜனவரி, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டுவது உறுதி-அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே..!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டுவது உறுதி என கண்டி நாவலப்பிட்டி தொகுதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் மின்சக்தி அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளர். உடுநுவர கெட்டகும்புரல் அண்மைவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 07 மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளை நோக்கும்போது நாம் 25லட்சம் வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளோம். எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் 30லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டுவோம். யுத்த வெற்றி ஒன்று மட்டுமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கப் போதுமானதாகும். இன்று நாட்டில் எப்பகுதிக்கும் அச்சம், பீதி இன்றிச் செல்லமுடியும். கிராமங்களுக்கு சவப்பெட்டிகள் வருவதில்லை. ஜெனரல் சரத் பொன்சேகாவால் மட்டும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அவர் யுத்தத்தில் பங்கு கேட்கின்றார். ஜெனரல் சரத் பொன்சேகாவால் மட்டுமல்ல ஜெனரல் டென்சில் கொப்பேகடுவயினாலும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்திருக்கும். ஆனால் அன்றைய அரசுத் தலைவர்கள் துணிச்சல் கொண்டிருக்கவில்லை. ஜே.ஆர்., ஆர்.பிரேமதாஸா போன்ற தலைவர்களால் வெற்றிகொள்ள முடியாமல்போன யுத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டுவந்தார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசபடைகள் சுற்றி வளைத்தபோது மேற்குநாடுகள் யுத்தநிறுத்தம் செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அரசு அடிபணியாது பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டியது. எனவே யுத்தவெற்றியில் ஜனாதிபதிக்கே பங்குண்டு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக