வியாழன், 3 ஜூலை, 2014

இன, மத வெறுப்புகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும் ஐ.நா..!!!!

இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம், சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பான தீவிரவாத பார்வை கொண்ட பௌத்த குழுக்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான 350க்கும் மேற்பட்ட வன்முறைகளும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 150க்கும் மேற்பட்ட வன்முறைகளும் பதிவாகியுள்ளன.

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அடிக்கடி நடத்தப்படுவதாக கூறப்படும் பேச்சு, பாகுபாடுகள், தாக்குதல் காரணமாக இந்த சமூகங்கள் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


பொதுபல சேனா அமைப்பு என்ற சிங்கள தீவிரவாத போக்குடைய அமைப்பு கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கமவில் நடத்திய பாரிய கூட்டத்திற்கு பின்னர், இன வன்முறைகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் கொள்ளையிடப்பட்டதுடன் எரியூட்டப்பட்டன.

இலங்கையில் இந்த வன்முறைகள், சுதந்திர சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விலக்களிப்பதற்கான சூழ்நிலையை வளர்க்கின்றன என மத அல்லது நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளர் ஹெய்னர் பொல்லிபெல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த சமூகங்களின் உடல் ரீதியான பாதுகாப்பு, வழிப்பாட்டுத் தலங்கள், சொத்துக்களை பாதுகாப்பது பொலிஸ் மற்றும் நீதித்துறை போதுமான முனைப்புகளை மேற்கொள்ளவில்லை.

சிறுபான்மை சமூகங்களில் நம்பிக்கை, சுதந்திரம், உரிமைளுக்கு உத்தரவாதம் வழங்கும் அதேவேளை, இன மற்றும் மத வெறுப்புகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக