புதன், 14 மே, 2014

ஓமந்தை அரச வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களினால், அரசாங்க அதிபருக்கு மகஜர்!!

வவுனியா, ஓமந்தை அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் அரசாங்க ஊழியர்கள் பல்வேறு இடர்பாடுகளை தாம் எதிர்கொள்வதாகக் கூறி மகஜரொன்றை திங்கட்கிழமை (12) கையளித்தனர்.

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவிடம் கையளிக்கப்படவிருந்த இந்த மகஜர் அவர் அங்கு இல்லாமையால், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


2011ஆம் ஆண்டு எமக்காக வவுனியா பிரதேச செயலகத்தால் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் காணிகளில் வீடுகளை கட்டி நாம் குடியேறியுள்ளோம்.

எனினும் சில அடிப்படை தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து நிம்மதியான வாழ்வியல் சூழலை ஏற்படுத்த பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1.இதுவரையில் காணிகள் சிலவற்றை அரசாங்க ஊழியர்கள் துப்பரவு செய்யாமல் இருப்பதுடன் அங்கு அவர்கள் வீடுகளை கட்டாமையால் விஷஜந்துகள் (பாம்புகள்) வீடுகளினுள் புகுகின்றன. இதனால், அச்சமடையவேண்டியுள்ளது. அத்துடன் திருடர்கள் பதுங்குவதற்கு ஏதுவாக இப்பற்றைகள் உள்ளது. எனவே, உடனடியாக பற்றைகளை அகற்றி அங்கு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கவும். இல்லையேல் அக்காணிகளை காணிகள் அற்ற ஏனையை அரசாங்க ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவும்.

2.பல வீதிகள் இன்னமும் சீரமைக்கப்படாமையால் மழை காலங்களில் வீதிகளில் நீர் தேங்குகிறது. இவ்வீதிகளை அண்டிய பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

3.எமது பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதுடன் பேருந்து தரிப்பிடத்தினையும் அமைக்க ஏற்பாடு செய்தல்.

4.அன்றாடம் உணவு தேவையை பூர்த்தி செய்ய உணவகங்கள், பலசரக்கு கடைகள் நிறுவுதல்.

5.மருத்துவ ரீதியான தேவையை பூர்த்திசெய்ய மருத்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள் அமைக்க உதவுதல்.

6.மக்களின் ஆன்மிக, உளத் தேவைகளுக்கான மத வழிபாட்டு ஸ்தலங்களை நிறுவுதல்.

7.சிறார்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய முன்பள்ளி அமைத்தல்.

8.எமது வீட்டுத்திட்டத்தில் ஏ – 9 வீதிக்கு இடையில் உள்ள சிறிய காட்டுப் பகுதியை அகற்றி வீதி அமைத்தல்.

9.தபால் விநியோகத்தை சீரமைப்பதற்காக வீதிகளுக்கு பெயர் சூட்டுதல்.

10.வீடு கட்டி வசிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு காணிகளுக்குரிய ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடு செய்தல்.

11.பூர்த்தியடையாத நிலையில் உள்ள கலாசார மண்டபத்தை முழுமையாக கட்டி முடித்து அச்சமூகத்தின் பாவனைக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் ஆகியன தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக