வியாழன், 15 மே, 2014

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகலில் வடக்கு மாகாண சபை முன்றிலில்!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை வட மாகாண சபையின் முன்றிலில் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைந்து நாளை முற்பகல் 11 மணிக்கு பேரவைக் கட்டடத் தொகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள்

இடம்பெறுமென ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நாளை 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான 3 நாட்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவு நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். பலியான உறவுகளின் நினைவு நிகழ்வில் வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவு கூருவது எமது கடமை. இறந்துபோன எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக