வியாழன், 15 மே, 2014

மே-12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் பெருவலியின் நினைவேந்தல் வாரமாக பிரகடனம்!! நாடுகடந்த தமிழீழ அரசு!!

புலம்பெயர் அமைப்புக்கள் பலவற்றை இலங்கை அரசு தடை செய்து, அது பற்றிய அறிவிப்பை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ள போதிலும் மேற்கு நாடுகள் பலவும் அந்த அறிவிப்பைப் பொருட்படுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கை அரசு தடைசெய்துள்ள அமைப்புக்களில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்பதும் ஒன்றாகும். ஆனால் அந்த அமைப்பு தொடர்ந்தும் பல்வேறு பொதுநிகழ்வுகளைப் பிரிட்டனில் முன்னெடுத்து வருகின்றது.


அதனைத் தடைசெய்ய பிரிட்டன் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துலக அரங்கில் இலங்கையைத் தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தவும் கூடியதான “SAY NO TO SRI LANAKA” எனும் கருத்தரங்கு நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெறவுள்ளது. இதேபோன்று மே-12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் பெருவலியின் நினைவேந்தல் வாரமாக பிரகடனம் செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, அந்த காலப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிக் கூட்டங்களையும், கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்திவருகிறது.

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதிகோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர்,பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு இலங்கையினால் தடைசெய்யப்பட்ட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் அனுமதியுடன் பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக