திங்கள், 25 அக்டோபர், 2010

இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது..!

இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரிசானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் சவூதி அரேபிய சிசுவொன்றை படுகொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்த மரண தண்டனை தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டை ரியாத் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு மாத குழந்தையை படுகொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் திகதி சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. ஆசிய மனித உரிமை ஆணையகத்தின் ஒத்துழைப்புடன் ரீசானா மேன்முறையீடு செய்திருந்தார். இதேவேளை, ரிசானாவின் தண்டனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ரீசானாவின் தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இதேவேளை, ரீசானாவின் தண்டனை தொடர்பில் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாதென சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரீசானா சிறந்த உடல் நலத்துடன் காணப்படுவதாகவும் பெற்றோரை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும், ரீசானாவை சிறையில் பார்வையிட்ட தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக