திங்கள், 13 செப்டம்பர், 2010

யாழ். மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் லண்டன் நியூஹாம் உதவி மேயர் போல் சத்தியநேசன் உரை..!

யுத்தத்தினால் பாதிப்புற்ற மனங்களை மாற்றியமைத்து மீண்டும் அந்த மக்களை சமூகத்தின் நற்பிரஜைகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு மாநகர சபைக்கும் உரியது. அதற்காகவும் அதேசமயம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவும் அரசியல்வாதிகளும் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என லண்டன் நியூஹாம் உதவி மேயர் போல் சத்தியநேசன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் லண்டன் நியூஹாம் நகர உதவி மேயருக்கு யாழ். மாநகரசபை வரவேற்பளித்தது. யாழ். மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில், யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த சமாதானம் நீடிக்க வேண்டும். அதன்மூலம் ஏற்படக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும். அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாக்க முற்படாது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும். புலம்பெயர்ந்தவர்களால் உங்களுக்கு நன்மையும் செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். அவர்கள் இங்கே முதலீடுகளைச் செய்யக்கூடிய தருணம் இது. எனினும் இங்கே கிடைக்கக்கூடிய பென்சனை எப்படியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர இங்குள்ள மக்களுக்கு நன்மைசெய்ய நினைப்பதாக இல்லை. உங்களை நடுத்தெருவில் விட்டதே இந்தப் புலம் பெயர்ந்தவர்கள்தான். அவர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பதே இங்கேயுள்ள மக்களின் துன்பத்தில் தான் என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சுகாதாரம், குடிதண்ணீர், மாநகர சபைக்கான கட்டடம் என்பவற்றிற்கான கோரிக்கைகளை முதல்வரும் ஆணையாளரும் உரையாற்றிய ஏனையோரும் முன்வைத்துள்ளனர். பிரித்தானியா மக்களின் தேவை அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கிறதே தவிர கட்டடங்கள் பற்றிச் சிந்திப்பதில்லை. மாநகர சபைக்கான கட்டடத்தை அமைக்க இதர நாடுகளின் உதவியைக் கோரினால் நானும் அதற்கு உதவுவேன். யாழ்ப்பாணம் மாநகர சபையுடன் நில்லாது யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சபையை ஆரம்பித்து அதன்மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் எனது ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக