திங்கள், 13 செப்டம்பர், 2010

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படவோ, கட்சியை இல்லாமல் செய்வதற்கோ எவராலும் முடியாது-ஜயலத் ஜயவர்த்தன..!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படவோ, கட்சியை இல்லாமல் செய்வதற்கோ நாட்டில் எவராலும் முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சை ஆசனத்தில் அமரப் போவதாகக் கடந்தவாரம் அறிவித்திருந்தனர். இது குறித்து அவரிடம் ஊடகத்தினர் தொடர்புகொண்டு கேட்டபோதே ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சியினுள் ஏற்பட்டிருக்கும் பிளவு தொடர்பாக ஆராயப்பட வேண்டும். கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருவதோடு நல்லதோர் தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுயேட்சையாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவிப்பு எவ்விதத்திலும் வெற்றியளிக்கப் போவதில்லை. எனவே கட்சித் தலைவர், குறித்த கட்சி உறுப்பினர்களை விரைவாகச் சந்தித்து, கலந்துரையாடி நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவரை நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த 25 கட்சி உறுப்பினர்கள் சுயேட்சை ஆசனத்தில் அமரப்போவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாகத் தமக்கு அறிவிக்கவில்லை எனக் கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, 25 கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்னும் சில உறுப்பினர்கள் சுயேட்சை ஆசனத்தில் அமரப் போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக