புதன், 16 டிசம்பர், 2009

கீரிமலை நகுலேஸ்வரம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறப்பு

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.
பத்தொன்பது வருடங்களின் பின்னர் பொதுமக்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த ஆலயம் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தற்போது அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா நகுலேஸ்வரக் குருக்கள் தெரிவித்திருக்கின்றார்.
சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சேந்தான்குளத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியை நேற்று காலை வைபவரீதியாகத் திறந்து வைத்து நகுலேஸ்வரம் ஆலயத்திற்கான பொதுமக்களின் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வைபவத்தில் யாழ் அரச அதிபர் கே.கணேஸ், முக்கிய இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆலயத்தைச் சென்றடைந்த இவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக