வெள்ளி, 26 டிசம்பர், 2014

வடமாகாண சபைக்கு தெரியாமல் ஐந்து பிரதேச சபைகளுக்கு தேர்தல் சலுகைகள்..!!

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்படாமல் மாகாணத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள 5 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசாங்கம் தேர்தலை அடிப்படையாக கொண்டு வழங்கியிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 19ம், 20ம் திகதிகளில் மேற்படி  ஐந்து பிரதேச சபைகளின் தலைவர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரதேச சபைகளுக்கு கப் வாகனம், உழவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் போன்றன
மத்திய அரசினால் வழங்கப்படவுள்ளதாக, செய்திகள்
வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் குறித்த உதவிகள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்டமையினால் தேர்தலை அடிப்படையாக கொண்ட உதவிகள் என
அறிய முடிகின்றது.

எனவே வடக்கில் அரசாங்க துறைகள் மற்றும் அரசாங்கத்தின் குறிப்பாக ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் உள்ள, சகல துறைகளிலும் தேர்தல் மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாகாண உள்ளூராட்சி அமைச்சரும் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தமக்கு அந்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை எனவும், உள்ளூராட்சி சபைகளுக்கு சொந்தமானவையாக குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பின் அவை தொடர்பில் எமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தெரியப்படுத்தப்படவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக