ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு வீசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: இந்தியா தெரிவிப்பு...!!!

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த குழுவினர், இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க மூவர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார்.

இந்தக் குழுவினர் இலங்கை வந்து விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருப்பதால் இந்தியாவில் வைத்து விசாரணைகளை நடத்தலாம் என்ற ஊகம் பரவலாக அடிபட்டது. எனினும் இந்தியா அதற்கான வீசா வழங்காது என்றும் ஒரு செய்தி பரவியது.



இதற்கிடையே வீசா விண்ணபத்தை இந்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி பரவியது. இவற்றை இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் செய்யித் அக்பர் தீன் மறுத்துள்ளார்.

மேலும் குறித்த குழுவினர் இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் இந்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை குறித்து இந்திய அரசின் முன்னைய நிலைப்பாட்டில் எதுவித மாற்றங்களும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக