சனி, 2 ஆகஸ்ட், 2014

எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்!- அமைச்சர் ஜகத் பாலசூரிய....!!!

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இராஜசிங்க மன்னருக்கு சொந்தமான பழமையான கட்டிடமொன்றை உடைத்துள்ளதாக எஸ்.பி. திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜசிங்க மன்னரின் திறைசேரியாக ஹங்குராங்கெத்தவில் உள்ள குறித்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொல்பொருள் சட்டத்தின் அமைய 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் தேசிய உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும்.

இவ்வாறான கட்டிடங்களை சேதப்படுத்தல் தொல்பொருள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயலாகும்.


இதேவேளை, ஹங்குராங்கெத்த வளவு தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க கட்டிடமாக அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மரபுரிமைக் கட்டிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்படாத நிலையில்,  கட்டிடம் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

எனினும்,  மன்னர் காலத்து கட்டிடம் என்பதனால் அதனை தேசிய மரபுரிமையாக அறிவிக்க முடியும்.

அதன் பின்னர் தேசிய மரபுரிமை ஒன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

இதற்காக தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் ஆணையாளரது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

அமைச்சர் திஸாநாயக்க கட்டிடத்தை சேதப்படுத்தியிருந்தால் அதற்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் ஆணையாளர் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது என சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக