ஞாயிறு, 8 ஜூன், 2014

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நியுநிலாந்து நீதிபதி தலைமையேற்கிறார்!!


இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக, நியுசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராக டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார் பணியாற்றியவர். இவரது தலைமையிலான ஐ.நா. நிபுணர்குழுவின் விசாரணை இலங்கையில் வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் ஐ.நா. அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், நியுசிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர். இவர் நீதிபதியாக இருந்த போது, மிகச் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றவர். பின்னர், 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இவர் நியுசிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 
அத்துடன் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கான குழுவிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 

இந்த விசாரணைகளுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழு நியமிக்கப்பட்டதும், இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்கு செல்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் என்றும் முன்னாள் ஐ,நா அதிகாரி தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக